பழைய புன்னகையில்
புதிய அர்த்தங்கள்,
தொய்ந்த கதைகளில்
இனிய திருப்பங்கள்,
நேற்றைய வினாடிகளில்
இன்றைய அலாரங்கள்,
உப்பு சப்பில்லாத அன்றைய நிமிடங்கள்
இன்று தித்திக்கிறது,
இதனை உன் அருகாமை ஆழமாய்
மெய்ப்பிக்கிறது,
ஏதோ ஒன்று உறுதி
செய்திருக்கிறது,
உன்னில் என்னையும்,
என்னில் உன்னையும்,
நம்மில் நமதையும்,
அனைத்தில் நம்மையும்,
நெஞ்சார்ந்து பார்க்கையில்
அனைத்து கவிதைகளும்
தோல்விகளே,
உண்மைகளை உண்மையாகவே காட்டும்
கவிதை கண்ணாடிகள் எது இங்கே ?
உன்னை நீயாகவே சொல்லும்
மொழியும் இல்லையே,
சிறந்த கவிதைகள் படைக்கமொழி ஆளுமை வேண்டும்,
நமது நிமிடங்கள்
எனக்கு போதும்
அச்சிறந்த கவிதைகளை
நான் மறக்க,
நீ அருகில் இல்லாமல்
பல வினாடிகள் பயனற்றவையாகவே
கழிகின்றன,
நீ அருகில் என்றாலோ
சில வினாடிகள் கழிந்தே பயனற்றவையாகின்றன,
எனக்கென்று
இறங்கி வந்த இமயம் நீ
எங்கிருந்தோ வந்தென்னை
கவ்விக்கொண்ட
கடல் காற்று,
எனக்கு பிடித்த
இரவுகளின்
ஒளிக்கீற்று,
வெளியில் தென்பட்ட மலர்களில்
தேன் தேடும்
தேனீக்களுக்கும், வண்டுகளுக்கும்
தெரியுமா?
எனக்கு உள்ளே
நான் சுமக்கும் ஆகயத்தாமரையான
உன்னை குடிப்பது
எவ்வாறென்று ?
என் இரகசிய
வெற்றிடங்களில்
நீ விசிறி அடித்த
வண்ணங்கள் தான் எத்தனை ?
எனக்கான
மேகக்கூடங்களில் இருந்து
துளிகளை பிரித்தளித்த
என் பிரியமான குளிர் காற்று,
தெரிந்தே நான்
மோத விரும்பிய
வேகத்தடைகள்,
உன் நடை கால்கள்,
தனித்திருக்கும் என்னை,இப்படியான உன்னை (பற்றி)
எழுதச்சொன்னால்
நான் என்ன செய்ய ?